மத்திய அரசை கண்டித்து கேரளாவில் பந்த்.. தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம் - பயணிகள் அவதி
கேரளாவில் முழு அடைப்பு நடைபெற்றுவருவதால் தமிழன எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி: கேரள மாநிலத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் செய்வதை எதிர்த்து கேளராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பாஜக தவிர அனைத்து கட்சிகள், மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த முழு அடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 தொழிற்சங்கங்கள்
பிற மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக சங்கள் அறிவித்துள்ளன. போராட்டத்தில் 16 தொழிற் சங்கங்களும் பங்கேற்க உள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தேர்வுகள் ரத்து
இன்று காலை 6 மணி முதல் இந்த வேலைநிறுத்தம் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக அரசு பேருந்துகள் இயங்கப்படவில்லை. அத்துடன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்கள் அவதி
இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் தமிழகத்தின் எல்லையான களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாலைகள் வெறிச்
பந்த் காரணமாக கேரள பேரூந்து இயக்கம் இல்லாத காரணத்தால் செங்கோட்டை பேரூந்து நிலையம் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல, தமிழக கேரள மாநில எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடியும் வெறிச்சோடியது.