ஓராண்டு ஆட்சி நிறைவில் இருக்கும் பழனிசாமி... சிறப்பாக கொண்டாடுவது பற்றி அமைச்சரவையில் ஆலோசனை!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது.
சென்னை : தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் மற்றும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அமைச்சரவையில் 18வது நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட உள்ள அம்சங்கள், துறைகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதிகள், எந்தெந்த துறைக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு என்று அடுத்தடுத்த ஊதிய உயர்வு கோரிக்கைகளால் அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. மேலும் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் பிப்ரவரி 24ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் இதற்கான நிதி எப்படி ஒதுக்குவது என்றும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அதிமுக அரசு பொறுப்பேற்று தொடர்ச்சியாக 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது மேலும், 16-ந் தேதி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் நடக்கும் நிகழ்ச்சிகள், ஆண்டு மலர் வெளியீடு உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.