மீனவர் படுகொலை குறித்து.. 10 மணி நேரத்திற்குப் பிறகு வாய் திறந்த எடப்பாடி!
தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டு 10 மனிநேரமாகியும் அதுகுறித்துக் கண்டனம் தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போதுதான் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்து 10 மணி நேரமாகியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து ஒன்றும் பேசாதது மிகக் கடும் அதிருப்தியை தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியது. தற்போதுதான் அவரிடமிருந்து கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய கடற்பகுதியில் இலங்கை கடற்படை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது, எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் கண்மூடித்தனமக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் பிரிட்ஜோ என்ற 21 வயது இளைஞர் அநியாயமாக பலியானார். மேலும் சாரோன் என்பவருக்கு கையில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நடந்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து, முதல்வரிடம் இரவு 12 மணிக்குப் பேசியதாகக் கூறினார். ஆனால், இந்த கொடூர சம்பவம் நடந்து 10 மணிநேரத்துக்கு மேலாகியும் முதல்வர் இதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தார். தன் மாநில மக்கள் கொலை செய்யப்படிருக்கிறார்கள் என்ற உணர்வில், உடனடியாக கண்டனத்தை தெரிவிக்காமல் இருந்தார் முதல்வர்.
இலங்கை அரசின் படுகொலையைக் கண்டித்து தமிழக மீனவர்கள் அனைவரும் கொந்தளித்து வரும் நிலையில் முதல்வர் அமைதியாக இருப்பதும் இது குறித்து எதுவும் கூறாமல் இருந்தது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 11 மணி வாக்கில்தான் முதல்வரிடமிருந்து கண்டன அறிக்கை வெளியானது.
நேற்று ஆர்.கே நகர் பகுதியில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், இந்த அரசு மீனவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.