சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த 4 தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி- ஜெ.
சென்னை: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 4 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 10லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3ம் தேதி இமயமலையின் சியாச்சின் போர்முனை பகுதிகயில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் புதையுண்டனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய நால்வரின் உடல்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஏழுமலை, தேனி மாவட்டம் குமணன் தொழுவைச் சேர்ந்த குமார், மதுரை மாவட்டம் சொக்கத்தேவன்பட்டியை கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய நால்வரும் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ராணுவ வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் கூறியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.