டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஓ.பி.எஸ்: ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் நாளை பங்கேற்பு
சென்னை: பிரதமர் தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறும் ‘நிதி ஆயோக்‘ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியான அதிமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். இன்று காலையில் அமைச்சர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் திருச்சியில் இருந்தவாரே டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நிதி ஆயோக் கூட்டம்
ஒவ்வொரு நிதி ஆண்டும் மாநிலங்களில் நடைபெறும் மக்கள் நல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கும். திட்டக்கமிஷன் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் நிதி அமைச்சர்கள் பங்கேற்று, தங்களது மாநிலங்களுக்கு தேவையான நிதிகளை பெறுவார்கள். பாஜக அரசு புதிதாக பதவியேற்ற பின்னர் திட்டக்கமிஷன் மாற்றியமைக்கப்பட்டு, ‘நிதி ஆயோக்‘ என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் செயல்படும் ‘நிதி ஆயோக்‘ திட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் சிலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று பேசுவதற்காக இன்று திருச்சியில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார் முதல்வர் பன்னீர் செல்வம்.
தலைமை செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்னையில் இருந்து இன்று இரவு விமானத்தில் புறப்பட்டு செல்கின்றனர்.
‘நிதி ஆயோக்‘ கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட இருக்கும் மக்கள் நல திட்டங்களுக்கும், தற்போது மத்திய -மாநில அரசுகள் இணைந்து செய்து வரும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.