காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை?... ஆலோசனை செய்ய ஸ்டாலினுக்கு முதல்வர் அழைப்பு!
காவிரி பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.
Recommended Video
சென்னை: காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதனையடுத்து நாளை முதல்வரை ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
காவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க உத்தரவிடப்பட்டது.
காவிரி நீர் கர்நாடகாவிற்கு கூடுதலாக கிடைத்ததற்கு வரவேற்பு தெரிவித்த அந்த மாநில முதல்வர் சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற பிரதமரை நேரில் வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் தமிழக அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகளுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அடைக்க வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 7ம் தேதி கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை முதல்வரை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார்.