ஓகி நிவாரணமாக கேட்டது ரூ.4047 கோடி... கிடைச்சதோ ரூ. 133 கோடி... சட்டசபையில் முதல்வர்
ஓகி புயலால் காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும் வரை தேடுதல் பணி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஓகி புயல் நிவாரணமாக முதற்கட்டமாக ரூ. 133 கோடியை மத்திய அரசு விடுவித்ததன் பலனாக கன்னியாகுமரி மாவட்டம் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓகி புயல் பாதிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அளித்த பதில் விவரங்கள் :
கடந்த நவம்பர் 29ம் தேதி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை மையம் விடுத்த எச்சரிக்கையையடுத்து தென் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களை எச்சரிக்க அரசிடம் நவீன கருவிகள் இல்லாததால் தகவல் அவர்களை சென்றடையவில்லை. எனினும் புயல் சின்னம் உருவாகும் முன்னரே விடுக்கப்பட்ட எச்சரிக்கையால் 1400க்கும் மேற்பட்ட மீனவர்கள் அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்தனர். அவர்களை தமிழக அழைத்து வர 11 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
பிற மாநிலங்களில் கரை சேர்ந்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும் டீசலும் வழங்கப்பட்டது. மேலும் 5 அதிகாகிள் நியமிக்கப்பட்டு அவர்கள் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட படகுகளும் 1124 மீனவர்களும் பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர்.
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க சக மீனவர்களே முன் வந்தனர். எனவே அவர்களை தேடுவதற்கான படகுகளுக்குத் தேவையான எரிபொருளை அரசே வழங்கியது. ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் பாதிப்பு மற்றும் வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி நிவாரணம் கோரியுள்ளோம். ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர், வாழை மர சேதங்களுக்கு ஏற்ப நிவாரணத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். மீனவர்களுக்கு வானிலை தமிழில் அறிவிப்புகளை தெரியப்படுத்த பிரத்யேக ரேடியோ சேவையை அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இதற்காக ரூ. 4 ஆயிரத்து 047 கோடி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓகி புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்து சென்றதன் விளைவாக முதற்கட்டமாக ரூ. 133 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் பலனாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் அதிமுகவின் சரியான அணுகுமுறையால் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.