"கை" அரிக்க ஆரம்பித்து விட்டது தமிழக காங். தலைவர்களுக்கு.. !
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும், கொஞ்ச காலம் வரைதான் இந்த அதிருப்திக் கோஷ்டிகள் அமைதி காக்கும். குறித்த காலத்திற்குப் பிறகு அவரைத் தூக்குங்க என்று கூறி டெல்லிக்குப் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் தற்போதைய தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தூக்கக் கோரி சிலர் கொதித்தெழுந்துள்ளனர்.
எந்த தமிழக காங்கிரஸ் தலைவரும் இயல்பாக நியமிக்கப்பட்ட வரலாறு கிடையாது. கோஷ்டிகளின் நிர்ப்பந்தம், போராட்டங்கள், மோதல்களின் விளைவாகவே தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நியமிக்கப்ட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போதைய தலைவர் இளங்கோவனை இத்தனை காலமாக கஷ்டப்பட்டு சகித்துக் கொண்ட 10க்கும் மேற்பட்ட கோஷ்டித் தலைவர்கள் தற்போது அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
யார் யாரப்பா?
முன்னாள் தலைவரான குமரி அனந்தன், அவரது தம்பியும் வர்த்த காங்கிரஸ் தலைவருமான வசந்த்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார் உள்பட 10க்கும் மேற்பட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ராகுலிடம் புலம்பல்
இளங்கோவனுக்கு எதிராக தனித் தனியாக செயல்பட்டு வந்த இவர்கள் இப்போது கூட்டாக சேர்ந்துள்ளனர். ராகுல் காந்தியைச் சந்தித்து முதலில் புலம்பினர்.
சோனியாவுடன் சந்திப்பு
அடுத்து சோனியா காந்தியை இன்று சந்தித்துள்ளனர். இளங்கோவனை மாற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இந்தத் தலைவர்கள் இதற்காக டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர்.
பதவிக்காக அலைகிறார்களே
இதற்கிடையே, இளங்கோவன் அளித்துள்ள ஒரு பேட்டியில், கட்சிக்காக உழைக்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். ஆனால் தலைவர்கள்தான் தயாராக இல்லை. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பதவியைப் பிடிக்க அலைகிறார்கள் என்று கூறியுள்ளார்.
மாற்றப்படுவாரா?
கோஷ்டித் தலைவர்களின் புதிய போராட்டத்தால் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவிக்கு ஆபத்து வருமா அல்லது வருகிற சட்டசபைத் தேர்தல் வரை சட்டை கிழியாமல் தப்பிப் பிழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.