விவசாயிகள் செத்து சுண்ணாம்பாக..... எம்.எல்.ஏக்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வா?
விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கும் மண்ணில் எம்.எல்.ஏக்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு என அறிவித்து வெந்த புண்ணில் வேல்பாய்ச்சியிருக்கிறது தமிழக அரசு.
சென்னை: தமிழக மக்கள் வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை எப்போ வரும்? குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.. இன்னொருபக்கம் வறட்சியின் கோரத்தாண்டவத்துக்கு 400 விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள்.. இதைபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாத தமிழக அரசு எம்.எல்.ஏ.க்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வை அறிவித்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 140 ஆண்டுகாலத்துக்குப் பின் வறட்சி தலைவிரித்தாடுகிறது.. விவசாயத்துக்கும் குடிக்கவும் நீர் இல்லாமல் அல்லோகலப்படுகிறது.
400 பேர் பலி
தமிழக வரலாற்றிலேயே பெருந்துயரமாக வறட்சிக்கு 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்திருக்கிறோம். தமிழகம் பஞ்ச பிரதேசமாக போய்விட்டது.
மாணவர்கள் படிப்புக்கு வேட்டு
தமிழக மாணவர்களின் மேற்படிப்பு கனவை காவு கொள்ளும் அத்தனை திட்டங்களையும் டெல்லி திணிக்கிறது. இதைப்பற்றி ஒருதுளி கூட சிந்திக்காத சுயநலவாதிகளின் கூடாரமாக இருக்கிறது தமிழக அரசு.
குண்டர் சட்டம்
எதைப் பேசினாலும் குண்டர் சட்டம் பாயும் என்கிற அவலத்தை நிகழ்த்துகிறது அரசு. மாணவி என்றும் கூட பார்க்காமல் வளர்மதியை குண்டர் என முத்திரை குத்தி குண்டாஸை ஏவிவிட்டிருக்கிறது அரசு. வறட்சியே தமிழகத்தில் இல்லை என பச்சை பொய்யை உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறது இந்த அரசு.
இருமடங்கு உயர்வு
செயல்படாத மக்களின் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு இப்போது எம்.எல்.ஏ.க்களுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வை அறிவித்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் இனி ஆட்சிக்கே வரப்போவதில்லை என்பதாலும் முடிந்த அளவு கொள்ளையடித்துவிடவும்தானே இந்த எம்.எல்.ஏக்கள் சம்பள உயர்வு அறிவிப்பு.
விவசாயிகளுக்கு கொடுங்க
எம்.எல்.ஏக்களுக்கு அறிவித்த சம்பள உயர்வுத் தொகையை செத்துப் போன விவசாயிகளுக்கு கொடுக்க மனமில்லாத ஈவிரக்கமற்ற அரசுதான் இது. இப்படியான அரசு எங்களுக்கு எதுக்கு? என்பதுதான் தமிழக மக்களின் உச்சகட்ட குமுறல்