நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்: ஜெயலலிதா
சென்னை: 25 மாவட்டங்களில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை விதி 110-இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அவையில் இன்று அறிக்கை ஒன்றை படித்தார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டில் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வாறாக தொடங்கப்படும் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு சமைப்பதற்குத் தேவையான நவீன சமையலறை, குடிநீர் வசதியுடன் கூடிய கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவை ஏற்படுத்தித் தரப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு தோராயமாக 19 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.