பின்னி பெடலெடக்கும் வெயில்..தமிழகம்,புதுவையில் ஸ்கூல் ஒரு வாரம் லேட்டா திறக்கும்..அரசுகள் அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : மாநிலத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தாமதப்படுத்தப்பட்டு ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2016- 17 கல்வியாண்டுக்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்ததையடுத்து 2017 - 18 கல்வியாண்டிற்காக பள்ளிகள் மீண்டும் ஜூன் 1ம் தேதி தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
பத்து மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உடனுக்குடன் நடத்தி முடிக்கப்பட்டன. கோடை வெயில் வாட்டியெடுத்ததால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சதமடிக்கும் வெயில்
இந்நிலையில் நாள்தோறும் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் கொல்கிறது. 100 டிகிரியைத் தாண்டும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
இதனால் பள்ளிகள் திறப்பை தாமதப்படுத்த வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஜூன் 7ல் பாடப்புத்தகம்
மேலும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியும் ஒத்திவைத்தது
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஒரு வாரம் தாமதமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில கல்வியமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியிலும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications