மக்களின் தொடர் போராட்டம் எதிரொலி.. பஸ் கட்டணத்தை "லைட்"டாக குறைத்தது தமிழக அரசு
தமிழகத்தில் போராட்டங்கள் எதிரொலி காரணமாக பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 66 சதவீத கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்ட நடத்தினர். இந்த நிலையில் பேருந்து கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.
ரூ. 1 குறைப்பு
இந்த நிலையில் அனைத்து நிலைகளிலும் ரூ. 1-ஐ குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.
எந்த பேருந்துகளில்...
அதேபோல், விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பேருந்துகளில்...
சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ. வரை ரூ. 60 வதிலிருந்து ரூ.58 ஆகவும், விரைவு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 80 ரூபாவிலிருந்து 75 ரூபாயாகவும், சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை ரூ.90-லிருந்து ரூ.85-ஆகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 110 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், குளிர்சாதன பேருந்துகளில் 30 கி.மீ.வரை 140 ரூபாயிலிருந்து 130 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம்
இந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும். சென்னை நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ஆக இருந்த நிலையில் ரூ.4-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-லிருந்து ரூ.22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டங்களில் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ18 -ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பினால் அரசுக்கு நாளொன்றுக்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.