குட்டீஸ்க்கு குஷியான செய்தி... பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக அதிகரிப்பு!
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்களை 220 நாளில் இருந்து, 210 நாட்களாக தமிழக அரசு குறைத்துள்ளதால் கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
திருநெல்வேலி : பள்ளி வேலை நாட்கள் 220 நாட்களில் இருந்து 210 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு 44 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. மேலும் ஏப்ரல் 21ம் தேதிக்கு பிறகு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்ரல் 16ல் முடிகிறது. மார்ச் 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 20ல் முடிகிறது. பொது தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 20க்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு, ஜூன் 1ம் தேதி தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடை விடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறையை நீட்டிக்கப்பட உள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது. கடந்த ஆண்டு வரை, தொடக்க பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்க பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்துள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.