வர்தா புயலால் பெரு மழைக்கு வாய்ப்பு.. மக்கள் செய்ய வேண்டியது என்ன? #vardah
வர்தா புயல் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களையும் கவனமாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: ஆந்திராவைத் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னைக்கு வெகு அருகே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் பெரு மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசும், வானிலை ஆய்வு மையமும் மக்களை கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
நாளை ஒரு நாள் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்குமாறு வானிலை நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். காரணம், கன மழையுடன், பெரும் காற்றும் வீசும் என்பதால் வெளியில் வருவது ஆபத்தானது என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
வர்தா புயல் சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மக்கள் செய்ய வேண்டியவை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
- இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம்.
- தாழ்வான மற்றும் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
- அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை யாரும் தொடவோ, மிதிக்கவோ வேண்டாம்.
- ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்படும் அதிகார பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்.
#Vardah Cyclone Helpline Numbers: 044- 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 044-2536 7823, 2538 7570 #CycloneVardah
— Sir Ravindra Jadeja (@SirJadeja) December 11, 2016
- அவசர உதவிக்கு 1070 என்ற நம்பர் தொலை பேசியில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
- வர்தா புயலால் 100 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசக்கூடும்.
- கடந்த 1994-ல் சென்னையில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
- நாளை மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
புயல் காரணமாக மக்கள் பீதி கொள்ளத் தேவையில்லை என்றும், புயலைச் சமாளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.