2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழப்பட்ட வீடுகளுக்கு ரூ.5000... தமிழக அரசு புதிய அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாக இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளத்தால் சூழப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.5000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு குடிசைகளை இழந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம், நிரந்தர வீடுகளில் வசிப்பவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இந்த நிவாரண நிதியுடன் சேர்த்து ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசியும், ஒரு வேட்டி , சேலையும் வழங்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதுகுறித்து வருவாய்த்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு, ரூ. 5 ஆயிரமும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4,100-ம் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உயர்த்தி, முழுமையாகவும், பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கும் நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரமும், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்புக்காக சிறப்பு நிவாரணத் தொகையாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்படும். பகுதி சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4100 ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.900 வழங்கப்படும்.
இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளத்தால் சூழப்பட்ட நிரந்தர வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் நிவாரனத் தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கணக்குத் தொடங்கப்பட்டு வரவு வைக்கப்படும். என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.