கேரளாவுக்கு தமிழகம் மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு
சென்னை: கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மேலும் ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக அரசு அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு:
அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத கன மழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வரை 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த தொடர் கன மழையின் காரணமாக உயிரிழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பிலும் தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக 10.8.2018 அன்று முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக அளித்திருந்தேன். மேலும், தமிழ்நாடு மக்களிடமிருந்து இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு கேரள மாநிலத்திற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.
தற்போது அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 5 கோடி நிதியுதவியை அளிப்பதுடன், பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 500 மெட்ரிக் டன் அரிசி, 19,000 லிட்டர் பால், 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 10,000 போர்வைகள், வேட்டி, கைலிகள் ஆகியவையும் வழங்கப்படும்.
மேலும் தமிழகத்திலிருந்து டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவும் கேரளாவுக்கு அனுப்பப்படும்.
இந்த பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையரின் தலைமையில் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தோஷ் பாபு, டரேஸ் அகமது ஆகியோர் பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.