தொடரும் விவசாயிகள் தற்கொலைகள்... என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிர்ச்சியில் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு அக்கறை காட்டாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது
சென்னை: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறினார். கடந்த ஆண்டு வெள்ளத்தில் மிதந்த தமிழகம் இந்த ஆண்டு விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி வறட்சியில் தவிக்கிறது.
வறட்சி காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் காவிரி டெல்டா பகுதிகளைச் சேர்ந்த 68 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது புள்ளி விபரம்.
தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில் வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்கும் என்றும், காவிரி நீரை நம்பியும் பயிரிட்ட விவசாயிகள் கடைசியில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டதுதான் மிச்சம்.
அதிர்ச்சி மரணம்
மழை பொய்த்துப் போனதாலும், காவிரி நீர் தேவையான அளவு கிடைக்காததாலும் தஞ்சை டெல்டா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடும் மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். விவசாயிகள் அனைவரும் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளதால்,வறட்சி காரணமாக பயிர்கள் கருகுவதை கண்டு மனம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். பலர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் மரணமடைகின்றனர்.
நாகையில் 34 விவசாயிகள் மரணம்
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதிலும் இருந்தும் 68 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் நாகை மாவட்ட விவசாயிகள் மட்டும் 34 பேராவர்.
68 பேர் தற்கொலை
புத்தாண்டு தினத்தன்று 11 தற்கொலைகள் மரணம் என்று அச்சுறுத்துகிறது நாளிதழ் போஸ்டர். இன்றும் 3 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இதுவரை 66 விவசாயிகள் வாடிய பயிரைக் கண்டு உயிரை விட்டுள்ளனர். இந்த உயிரிழப்புகளை உடனே தடுத்து நிறுத்த,மத்தியக் குழு விரைவில் தமிழகத்தை பார்வையிட்டு,தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு மற்றும் அரசு வேலை ஆகியவை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளும் கட்சி மெத்தனம்
ஆளும் அதிமுக அரசு கடந்த 4 மாதங்களாகவே செயலற்ற நிலையிலேயே இருக்கிறது என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு. முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் யாகங்கள், பூஜைகள் என கோவில்களில் அமைச்சர்கள் வலம் வந்தனர். விவசாயிகள் தற்கொலைகள் அப்போது பெரிதாக பேசப்படவில்லை.
காவிரி நதிநீர்
தண்ணீரின்றி பயிர்கள் முற்றிலும் கருகவே விவசாயிகளின் மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும். கீழ்படியவில்லை கர்நாடகா அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவும் காற்றோடு கலந்து போனது.
வறட்சி மாநிலம்
முதல்வராக இருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்து விட்டார். ஆனாலும் துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கிறது ஆளும் அரசு. விவசாயிகள் மரணம் 2017ம் ஆண்டிலும் தொடர்கதையாகி வருவதுதான் சோகம். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை அதிகரித்து வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விவசாயிகளுக்கு அனுசரணையாக பேசினாலே விவசாயிகளின் சோகம் தீரும் என்று கூறி வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் சோகம் தீர முதல்வர் என்ன செய்யப் போகிறார் என்பதே அனைவரின் கேள்வியாகும்.