டெங்கு அரசு ஒழிந்தால்தான் தமிழகத்தில் டெங்கு ஒழியும்- ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு காரணம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: டெங்கு ஒழிய வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டெங்கு அரசு ஒழிய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ என்ற வகையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அயானவரம் திக்காகுளத்தில், பாதாளச்சாக்கடை மூடி விஷவாயு அழுத்தத்தால் தூக்கி வீசப்பட்டதில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார்.
பெரம்பூர் லோகோ பகுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு குப்பைகள் குவிந்திருந்ததை கண்டு அவரே அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
சுகாதார சீர்கேடு அதிகரிப்பு
வில்லிவாக்கம் ரயில்நிலைய பகுதியிலும் குப்பைகளை அகற்றும் பணியினை அவர் பார்வையிட்ட ஸ்டாலின், சீனிவாசபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், சுகாதார சீர்கேடுகள் அதிகரிப்பது, டெங்கு பரவுவது போன்ற நிலைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததும் முக்கிய காரணம் என குற்றம்சாட்டினார்.
டெங்குவிற்கு 100 பேர் பலி
தமிழகத்தில் டெங்குவிற்கு சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தினமும் காய்ச்சல் பாதிப்பால் உயிர் பலி ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது.
சுகாதாரப்பணி இல்லை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தான் டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு காரணம். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் சுகாதார பணிகளில் ஈடுபட்டிருந்தால், டெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.
டெங்கு காய்ச்சல் ஒழியும்
திமுக சார்பாக நிலவேம்பு கசாயம் அளிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து நோட்டீஸ் அளித்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தை பீடித்துள்ள டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான், டெங்கு நோயும் ஒழியும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.