தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் முதல்வர் ஓ.பி.எஸ் படம் இல்லை.. "அம்மா" படம் மட்டுமே!
சென்னை: சென்னையில் குடியரசு தினவிழா விழா அணிவகுப்பில் பங்கேற்ற அரசு அலங்கார ஊர்திகளில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகைப்படத்திற்கு பதிலாக முன்னாள் முதல்வர் புகைப்படமும், அவரது ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளும் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 66 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே கொண்டாடப்பட்டது. ஆளுநர் ரோசய்யா தேசியக்கொடி ஏற்றிவைத்து முப்படைத்தளபதிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் வரிசையாக சென்றன.
தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, மின்சார துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, பள்ளிக்கல்விதுறை உள்பட 25-க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில், அந்தந்த துறைகளால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சாதனைகளை விளக்கும் வண்ணம் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெற்றன.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் படம் அலங்கார ஊர்திகளில் இடம்பெறவில்லை. மாறாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது நிறைவேற்றிய சாதனை திட்ட செயல் விளக்க படங்களுடன் ஒவ்வொரு துறை வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ ஜெயலலிதா உருவம் பதிக்கப்பட்ட அலங்கார ஊர்தியின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஊர்தியில் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் படம் போட்ட வாகனத்தை அனுமதித்தது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அன்பழகன். இதற்கு ஏராளமானோர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.