விரைவில் வெள்ள நிவாரண நிதி.. அள்ளிக் கொடுக்க ஆயத்தமாகிறது தமிழக அரசு
சென்னை: மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை தமிழக மக்கள் சந்தித்து வரும் நிலையில், மக்களின் அதிருப்தியிலிருந்து தப்பிக்க பெருமளவிலான தொகையை நிவாரண நிதியாக கொடுத்து மக்களின் வாயை அடைக்க அரசுத் தரப்பில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
கொடநாடு பயணத்தை முடித்துக் கொண்டு ஜெயலலிதா சென்னை திரும்பியதுமே மழை வெளுத்துக் கட்ட ஆரம்பித்தது. விடாமல் பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் இதுவரை அந்த மாவட்டத்தை ஹெலிகாப்டரில் பறந்து கூட ஜெயலலிதா பார்க்கவில்லை. அமைச்சர்களும் கூட நீண்ட தாமதத்திற்குப் பிறகே அங்கு சென்றனர். அரசின் இந்த அலட்சியப் போக்கால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் கடும் கொந்தளிப்பில் உள்ளது.
தற்போது சென்னையும் கூட கன மழையால் நாசமாகிப் போய்க் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். சரியான மழை நீர் வடிகால் வசதிகள் இல்லாததால் தண்ணீர் போக வழியில்லாமல் மக்களும், நகரமும் மிதந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடும் திட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படியோ இருந்தாலும் அது சாத்தியப்படுமா என்றும் கேட்கப்படுகிறது. அத்தனை இடங்களுக்கும் செல்வது, சாலை மார்க்கமாக பயணிப்பது, ஹெலிகாப்டரில் செல்வது, தண்ணீர் இறங்கி மக்களைச் சந்திப்பது ஆகியவற்றுக்கெல்லாம் சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். மேலும் ஒரு இடத்திற்குப் போய் விட்டு இன்னொரு இடத்திற்குப் போகாமல் இருக்க முடியாது.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து தற்போது வேறு திட்டத்தை அரசு திட்டமிட்டு வருகிறதாம். அதாவது பெரிய தொகையை மழை நீர் வெள்ள நிவாரணமாக அளித்து விட்டு மக்களின் வாயை அடைக்கலாம் என்பதே அந்தத் திட்டம்.
மக்களுக்கு வெள்ள நிவாரணமாக நகரப்புற பகுதிகளில் ரேஷன் கார்டுக்கு தலா 2,000 ரூபாயும், கிராமப்புற பகுதிகளில் தலா 5,000 ரூபாயும் கொடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்களாம்.
இப்படித்தான் முன்பு 2005ம் ஆண்டும் பெருமழை வெள்ளம் தமிழகத்தை சுழற்றியடித்தது. சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் மழை நிவாரணம் வாங்க வந்த மக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்துபோனார்கள். இதேபோல் வியாசர்பாடியில் 6 பேர் இறந்துபோனார்கள். அதேசமயம், மழையே பெய்யாத மதுரையிலும் வெள்ள நிவாரண நிதியைக் கொடுத்தது அப்போதைய அதிமுக ஆட்சி.
2006ல் வந்த தேர்தலை மனதில் கொண்டு இப்படி மழை வெள்ள நிவாரணம் என்று கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் கொடுத்தார்கள். இப்போதும் அடுத்த ஆண்டு வரும் தேர்தலை மனதில் கொண்டு மக்களிடம் நிவாரண நிதியைப் பாய்ச்சி விட்டால் மக்கள் "சாந்தமாகி" விடுவார்கள் என்று கணக்கு போடப்பட்டுள்ளதாம்.