சன் டிவி ஊழியர்கள் கைது: ஸ்டாலின், ஜி.கே.வாசன், திருமா கண்டனம்
சென்னை: சன் டிவி பணியாளர்களை சிபிஐ கைது செய்துள்ளது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்த வி.கவுதமன், சன் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டி.வி.யின் எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோர், நேற்றிரவு சிபிஐ அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த 8 ஆண்டாக நடைபெற்று வரும் வழக்கில் திடீரென கைது செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ தொடர்ந்துள்ள இந்த வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஜி.கே.வாசன்
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மத்திய அரசு சமீபகாலமாக பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் சி.பி.ஐ.-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு நடவடிக்கை எடுப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஆதாரமின்றி யாரையும் திடிரென கைது செய்ய கூடாது எனவும் வலியுறுத்திய அவர், ஆதாரமின்றி கைது செய்வது பத்திரிகை சுதந்திரத்துக்கு விடுக்கும் அச்சுறுத்தல் எனவும் தெரிவித்தார்.
திருமாவளவன்
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், சன் டிவி ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.
மத்தியில் பாஜக ஆட்சி வந்த பின்னர் தமிழகத்தில் பாஜக வேரூன்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே திமுகவிற்குஎதிரான செயல்களை செய்து வருகிறது
அதிமுக பொதுச்செயலாளரை மத்திய நிதியமைச்சர் ருண்ஜெட்லி சந்தித்த பின்னர் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும் என்றார் திருமாவளவன்.