ஹட்சன் நிறுவன பாலில் ரசாயனம் கலப்பு உள்ளது நிரூபணமாகியுள்ளது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தனியார் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த அமைச்சர் என்ற முறையில் முழு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : தனியார் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த முழு அதிகாரம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார்.
ஹட்சன் நிறுவன பாலில் காலாவதி ரசாயனம் கலப்பு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. மேலும் பாலில் கலப்படம் இருப்பதை டோட்லா நிறுவனமே 2001-ல் ஒப்புக்கொண்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விஜய் பால், ஹட்சன், டோட்லா உள்ளிட்ட நிறுவனங்கள் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவிப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து பால் நிறுவன மாதிரிகளை ஆய்வு செய்ய தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஹட்சன் நிறுவன பாலில் காலாவதி ரசாயனம் கலப்பு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. மேலும் பாலில் கலப்படம் இருப்பதை டோட்லா நிறுவனமே 2001-ல் ஒப்புக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
பாலில் ரசாயனம் இல்லை என்று தனியார் நிறுவனங்களால் நிரூபிக்க முடியாது, என்னை மிரட்டும் நோக்கத்துடனே ஹட்சன், டோட்லா, விஜய்பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
சட்டவிரோதமாக செயல்படும் பால் நிறுவனங்களே குற்றச்சாட்டுக்கு பயப்படுகின்றன, அமைச்சர் என்ற முறையில் பால் நிறுவனங்களில் சோதனை நடத்த முழு அதிகாரம் உள்ளது. அரசு ஊழியர் கடமை செய்வதை எதிர்த்து சிவில் வழக்கு தொடர முடியாது. பால் கலப்படம் தொடர்பாக தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் அவர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளார்.