துறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக அமைச்சர்கள் திடீர் ஆய்வு
சென்னை: தலைமைச் செயலகத்தில் தங்களது துறைகளின் செயல்பாடுகள் குறித்து தமிழக அமைச்சர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உபகரணங்கள், கல்வி உதவித் தொகை போன்றவை குறித்தும் அவர் கூட்டத்தில் ஆய்வு செய்தார். இதில் அத்துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதே போல வேளாண்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் உடனே விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதில் அத்துறையின் முதன்மைச் செயலாளர், கூடுதல் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரக்கு இணையாக தமிழகத்திலும் அரசு மற்றும் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது.