ஜெயலலிதாவின் ரூ.4000 கோடி சொத்து விபரங்களை தமிழக நாளிதழ்கள் மறைப்பது ஏன்?: கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த செய்திகளை தமிழக நாளேடுகள் வெளியிடாமல் மறைத்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திங்கட்கிழமையன்று (24-3-2014) பெங்களூரில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களே ஆஜராகி, ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரங்களை நீதிபதியின் முன்னால் எடுத்துரைத்திருக்கிறார்.
அப்போது ஜெயலலிதா தரப்பினர் வாங்கிய சொத்துக்கள் பற்றியும், அதன் தற்போதைய மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமென்றும் பல ஆதாரப்பூர்வமான தகவல்களை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்தச் செய்தி, முரசொலி, தினகரன் ஏடுகளைத் தவிர வேறெந்த இதழிலும் வெளியிடப்படவில்லை.
நாளிதழில் வெளியாகவில்லை
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், ஒரு நாளிதழின் "வெப்சைட்டில்" நேற்றைய தினமே இந்தச் செய்தி விலாவாரியாக வெளியிடப்பட்டு விட்டது. அதற்குத் தலைப்பே, "ஜெ. குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான்; அரசு வக்கீல் தெரிவிப்பு" என்பதாகும். அதாவது, ஜெயலலிதா வாங்கிக் குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் என்று "வெப்சைட்டில்" வெளியிட்டுள்ள அந்த நாளேடு, இந்தச் செய்தியை நாளிதழிலே வெளியிடவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.
பத்திரிக்கை தர்மமா?
நாளிதழில் அந்தச் செய்தியை வெளியிட்டால், முதலமைச்சர் அதனைப் படித்து விட்டு கோபமடைவார்! அதே நேரத்தில் உண்மையையும் வெளியிடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக "வெப்சைட்டில்" மட்டும் வெளியிட்டு விட்டு, நாளிதழில் வெளியிடாமல் தவிர்த்துவிட்டது. ஆனால் மற்ற நாளேடுகள் எல்லாம் முற்றிலுமாக இந்தச் செய்தியைத் தவிர்த்து விட்டன என்றால், தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட "பத்திரிகாதர்மம்" நிலவுகிறது என்பதைத்தான் வேதனையோடு குறிப்பிட வேண்டியதாக உள்ளது!
4000 கோடி ரூபாய் சொத்து
ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி முரசொலியில் வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில் இருட்டடிப்பு செய்திருக்கின்றன.
பத்திரிக்கைகள் நடுநிலையில்லை
ஏறத்தாழ நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றைய தினம் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின் பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன?.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.