'ரெட் பஸ்' மூலம் புக் செய்த டிக்கெட்டுகள் செல்லாது.. ஆம்னி பஸ் சங்கம் அறிவிப்பு.. பயணிகள் அதிர்ச்சி
ரெட் பஸ் ஆப் மற்றும் வெப்சைட் மூலம் புக் செய்த டிக்கெட்டுகள் செல்லாது என தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை: ரெட் பஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்த பஸ் டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், டிக்கெட் புக் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாண்டியன் மற்றும் செயலாளர் அன்பழகன் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரெட் பஸ் நிறுவனத்தினர், எங்களுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். 15 நாட்கள் அவர்களுக்கு அவகாசம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு பதில் தரவில்லை. எனவே, ஜனவரி 12 முதல் ஜனவரி 17ம் தேதிவரையிலான காலகட்டத்தில் பயணிக்க டிக்கெட் எடுத்த பயணிகளின் டிக்கெட்டுகள் செல்லாது என அறிவிக்கிறோம்.
ரெட் பஸ் ஆப், அவர்களின் இணையதளம் வாயிலாக புக் செய்த டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த டிக்கெட்டை பயணிகள் வாபஸ் செய்துவிட்டு, பஸ் நிறுவனங்களின் ஆப், வெப்சைட் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அல்லது பஸ் நிறுவன கவுன்டர்களுக்கு நேரில் வந்து டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். முடிந்த அளவுக்கு அதே சீட்டுகளை பயணிகளுக்கு ஒதுக்கித் தர நாங்கள் நடவடிக்கை எடுப்போம். போனில் சீட் நம்பரை சொல்லிவிட்டு கூட பயணிகள் டிக்கெட்டை புக் செய்ய வரலாம். நாங்கள் அதே சீட்டுகளை தந்து ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.
அதேநேரம் டிக்கெட்டை ரத்து செய்த கட்டணத்தை ரெட் பஸ் பயணிகளிடம் பிடித்தம் செய்யும். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாத சூழலில் உள்ளோம்.
பஸ்களின் சொந்த வெப்சைட்டுகள், பிற நிறுவன (டிக்கெட் கூஸ் போன்றவை) டிக்கெட் புக்கிங் ஆப்புகள் மூலம் புக் செய்த டிக்கெட்டுகள் செல்லுபடியாகும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். நேரடியாக பஸ் நிறுவனங்களின் வெப்சைட்டில் டிக்கெட்டை புக் செய்வதே பாதுகாப்பானதாகும்.
ரெட் பஸ் நிறுவனம், இதுவரை 3 உரிமையாளர்களை மாற்றிவிட்டது. எங்களுடைய டேட்டாக்களை விற்பனை செய்து அவர்கள் லாபம் பார்க்கிறார்கள். இப்படி உரிமையாளர்களை மாற்றுவதை கட்டுப்படுத்த நாங்கள் கோரிக்கைவிடுத்தோம், அவர்கள் ஏற்கவில்லை.