கேரளாவில் இருந்து கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரி... திருப்பி அனுப்பிய தமிழக போலீசார்
கேரளாவிலிருந்து கருவாடு கழிவுகளை ஏற்றிவந்த லாரியை மடக்கிய தமிழக போலீசார் மீண்டும் கேரளா எல்லையில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துள்ளனர்
செங்கோட்டை: கேரளாவில் இருந்து கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கிப் பிடித்த தமிழக போலீசார் மீண்டும் கேரளாவிற்கே கொண்டு போய் விட்டு விட்டு வந்துள்ளனர். கழிவுகளை திரும்ப கொண்டு வந்தால் கைது செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுவருகிறது.
லாரி டிரைவர்கள்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்களின் கழிவுகளை கேரளாவிலிருந்து லாரி, லாரியாக தமிழகத்தின் எல்லைகள் வழியாக இங்குள்ள லாரி ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏற்றி வந்து தமிழகத்தில் கொட்டிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது.
கழிவுகள் கொட்டும் லாரிகள்
பல சோதனை சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி வாகனங்களை திருப்பி அனுப்புவதும் நடந்து வருகின்றது. எனினும் கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர்.
கருவாடு கழிவு
இந்நிலையில் இன்று காலை கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஒரு லாரியில் புழுக்கள் கொத்து..கொத்தாக சாலையில் கொட்டியவாறு கருவாடு கழிவுகளை ஏற்றி வந்த லாரி குறித்து புளியரை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.
திருப்பி அனுப்பிய போலீஸ்
லாரியை விரட்டிய போலீசார் அந்த லாரியை புளியரை போக்குவரத்து சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர். டிரைவரிடம் விசாரணை நடத்திய அவர்கள், மீண்டும் அந்த லாரியை ஆரியங்காவு வனத்துறை சோதனை சாவடியை தாண்டி கழிவு லாரியை கொண்டு சென்று விட்டு விட்டு வந்தனர். கொல்லத்தை சார்ந்த ஓட்டுநர் சுந்தரம் மகன் சுதீப்பிடம் திரும்ப தமிழகத்திற்குள் வந்தால் கைது செய்து லாரியை பறிமுதல் செய்வதாக எச்சரித்து விட்டு போலீசார் திரும்பினர்.