"ஆசிரியர் தினம்"தான் .. "குரு உத்சவ்" பெயரில் நிகழ்ச்சி இல்லை: தமிழக கல்வித் துறை
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் தினம் என்ற பெயரிலேயே நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் குரு உத்சவ் என்ற பெயரில் நடத்தமாட்டோம் என்றும் தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘‘ஆசிரியர்கள் தினம்'' எனக் கொண்டாடப்படுவது இனி வருங்காலங்களில் ‘‘குரு உத்சவ்'' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
புதிய பா.ஜ.க. அரசின் இந்த செயல் முழுக்க முழுக்க கல்வியில் இந்துதுத்துவாவை திணிக்கும் நடவடிக்கை என்றும், நாட்டை சமஸ்கிருதமயமாக்கல் செய்யும் முயற்சியின் ஒரு பகுதி எனவும் கூறப்பட்டது. இந்த மோசமான அறிவிப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன.
அந்த வகையில் தமிழகமும் சேர்ந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் நடைபெற்ற முறைப்படியே தற்போதும் தமிழகத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும். தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த ஆண்டு 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான விழா சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த விழாவில் ஆசிரியர்கள் தினத்திற்கான அட்டையை மட்டும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும், வேறு எந்த புதிய பெயரையும் பயன்படுத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மோடி மற்றும் மாணவர்கள் இடையேயான கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு இது வரை அப்படி எந்த திட்டமும் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.