போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு
போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஏழு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை : வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஏழுநாள் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது தமிழக அரசு. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 13வது சம்பள கமிஷனின் உத்தரவுபடி, தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை பல மாதங்களாக முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை போராட்டம் நடத்தினர்.

தலையிட்ட உயர்நீதிமன்றம்
22 முறை அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்து ஊதிய உயர்வு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதின் பேரில் போக்குவரத்து தொழிலாளர்கள் 12ம் தேதி முதல் வேலைக்குத் திரும்பினர்.

நீதிமன்றத்தில் வழக்கு
போக்குவரத்துத்துறை ஊழியர்களின் இந்த திடீர் வேலைநிறுத்தத்தால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதே நேரம், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது.

வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளம்
ஆனால் இன்று வெளியான அரசு உத்தரவில், வேலை நிறுத்தம் நடந்த ஏழு நாட்களுக்கான சம்பளத்தை ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் தங்களின் ஒரு வார ஊதியத்தை இழக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். ஊழியர்களின் பணிக்காலத்தை பொறுத்து 3500 ரூபாய் முதல் 10000 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பிடித்தம் செய்யப்பட உள்ளது.

நாளை தொழிற்சங்கக் கூட்டம்
இதனால் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் நாளை சென்னையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினை கோர்ட்டில் இருப்பதால் நீதிமன்றத்தை அணுக தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துஇருப்பதாக தெரிகிறது. இதுபற்றி சி.ஐ.டி.யூ. தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், "அரசின் முடிவு தன்னிச்சையானது. இதுபற்றி நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம்" என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications