கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த அரசுப் பேருந்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து கிளம்பிய அரசுப் பேருந்து திருப்பனந்தாள் அருகே கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று இன்று காலை 7.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து கிளம்பி சீர்காழி நோக்கிச் சென்றது. பேருந்தை தமிழ் அழகன் என்பவர் ஓட்டினார். திருப்பனந்தாள் அருகே இருக்கும் காகிதப்பட்டறை அருகே செல்கையில் பேருந்தின் வலப்பக்க முன் டயர் திடீர் என வெடித்தது.
இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து டிரைவர் ஸ்டியரிங்கை பிடிக்க அதுவும் உடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பேருந்து தாறுமாறாக ஓடி கண்ணன் என்ற காய்கறி வியாபாரியின் வீட்டிற்குள் புகுந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 2 ஆசிரியைகள், பள்ளி மாணவர்கள் 8 பேர், ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். பேருந்து வீட்டின் மீது மோதும் முன்பு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் அதில் வந்த பொதுப்பணித்துறை ஊழியர் மதி என்பவர் படுகாயம் அடைந்தார்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.