சென்னை ஹோட்டல்களுக்கு கெட்டுப்போன மட்டன் சப்ளையா?
சென்னை: ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டு சென்னை ஹோட்டல்களில் விற்பனை செய்யப்பட திட்டமிட்டிருந்த அழுகிப்போன மாமிசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ஆந்திராவில் இருந்தும் அழுகி போன மாமிசங்கள் சென்னைக்கு கொண்டுவரப்படுகின்றன.
சென்னைக்கு ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் ரயில்களில் அழுகிப்போன மாமிசங்கள் கொண்டுவரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கடந்த பல மாதங்களாகவே அவ்வப்போது சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தி அதுபோன்ற மாமிசங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
நேற்றுமுன்தினம்கூட, ஜெய்ப்பூர்-சென்னை எக்ஸ்பிரசில் கொண்டுவரப்பட்ட அழுகிப்போன 3,300 கிலோ அளவுள்ள மாமிசங்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதலாகியுள்ளன. இந்த மாமிசங்கள், சென்னையிலுள்ள ஹோட்டல்களுக்கும், சிந்தாதிரிபேட்டை பகுதியிலுள்ள கறிக்கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூரில் கிடைக்கும் மாமிசத்தைவிட இவை விலை குறைவாக இருப்பதால், இந்த மாமிசங்களை வாங்க பல கறிக்கடைகளும், ஹோட்டலகளும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் சுகாதாரம் கெட்டுவிடும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை மட்டன் வியாபார (சில்லரை) சங்க பொதுச்செயலாளர் எம்.அன்வர் பாஷா குவரோச்சி கூறுகையில், சென்னையில் தற்போது செயல்படும் கசாப்பு கடைகள் சுகாதாரமாக இல்லை. இதை சுகாதாரமான முறையில் மாற்றுவதுடன் கூடுதலாக கசாப்பு கடைகளை திறக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு ஹோட்டல் சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில், "ஹோட்டல்களில் அழுகிப்போன மாமிசங்களை பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினால், வாடிக்கையாளர் வருகையை அது பாதித்துவிடும். சாலையோர தள்ளுவண்டி கடைகளிலும், டாஸ்மாக் மதுபான கடைகளையொட்டிய ஹோட்டல்களிலும் வேண்டுமானால் அழுகிப்போன மாமிசங்கள் பயன்படுத்தப்படலாம்" என்றார்.