இந்தியாவிலேயே அதிக மழை பதிவான நகரம் சென்னை : இன்றும் மழை!
சென்னை: இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் அதிக அளவில் மழை பதிவான நகரமாக சென்னை திகழ்கிறது. சென்னையில் நேற்று ஒரே நாள் இரவில் 82 மிமீ மழை கொட்டித்தீர்த்துள்ளதாக ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழக்தில் 2 தினங்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான வெயில் எட்டிப்பார்த்தாலும் மக்களை வாட்டும் அளவுக்கு இல்லை.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் முதலில் சென்னையின் புறநகர் பகுதிகளான, தாம்பரம், குரோம்பேட்டை, போரூர், பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து 10.30 மணியளவில் சென்னை நகரில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு மொத்தம் 82 மீமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
#Chennai in #TamilNadu is the rainiest place in India with heavy rains of 82 mm: https://t.co/h0yb8yAM7l #Monsoon2016 #India #Rains pic.twitter.com/WLwdDpXP9B
— SkymetWeather (@SkymetWeather) September 29, 2016
நேற்றிரவு பெய்த தொடர் மழையால், சென்னையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் 10 நகரங்களில் பெய்த மழையை ஒப்பிடும் போது சென்னைதான் அதிக அளவு பெய்த நகரம் என்பது தெரியவந்துள்ளது.
தமிழக தலைநகர் சென்னையில் 82 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 75 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் 74 மிமீ மழையும், அந்தமான் நிகோபார் போர்ட் பிளேர் பகுதியில் 71 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவா பகுதியில் 70 மிமீ மழையும், ஒடிசாவில் 62 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. அந்தமான் நிகோபார் பகுதியில் மாயாபந்தர் பகுதியில் 61 மிமீ மழையும், சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் பகுதியில் 48 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
பீகாரின் பாகல்பூர் பகுதியில் 46 மிமீ மழையும், அந்தமான் நிகோபாரில் உள்ள லாங் ஐலேண்ட் பகுதியில் 37 மிமீ மழையும் நேற்றிரவு பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் சென்னை மாநகரத்தில் இப்போது முதலே மழை கொட்டத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications