டிராபிக் ராமசாமியின் ஹைகோர்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக... "கடும் கண்டனம்"!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பான புகைப்பட ஆதாரத்தை எப்படிக் கேட்கலாம் என்று சமூக நல ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு கொட்டு வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவுகின்றன. இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான பதட்டம் நிலவுகிறது. வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதே நேரம், தமிழக அரசு இதுநாள் வரை ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
ஜெயலலிதா அதிகாரிகளுடன் காவிரி விவகாரம் குறித்து விவாதித்தார் என்று தமிழக அரசு பத்திரிகை செய்தி வெளியிட்டாலும், அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடவில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் மட்டும் அவ்வப்போது, ஜெயலலிதாவின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிடுகிறது.
இதனால் மக்கள் மத்தியில் ஒரு விதமான குழப்பமும், பதட்டமும் ஏற்படுகிறது. எனவே, முதல்அமைச்சர் உடல் நலம் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளுடன் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உள்ளதால், அவர் மேற்கொள்ள வேண்டிய அரசுப் பணிகள் எல்லாம் நின்று விட்டது. அதனால், அந்த பணிகளை மேற்கொள்ள தற்காலிக முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் முதல்வர் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.
இன்று வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமி ஆஜராகி, தன் வழக்கு குறித்து வாதம் செய்தார். இறுதியில் டிராபிக் ராமசாமிக்குக் கண்டனம் தெரிவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் கூறுகையில், ஒரு முதல்-அமைச்சர் உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். அவரது உடல் நலம் குறித்து புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எப்படி கேட்க முடியும்? உங்களது அரசியல் விளையாட்டுக்கெல்லாம் இந்த ஐகோர்ட்டை மேடையாக்காதீர்கள் என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டிராபிக் ராமசாமியின் உயர்நீதிமன்ற வரலாற்றில் மிகப் பெரிய கண்டனத்துக்குள்ளானது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தெரிகிறது. பொதுவாக டிராபிக் எந்த வழக்கைப் போட்டாலும் அது புயலைக் கிளப்பும். அவருக்கு சாதகமாகவே பெரும்பாலும் தீர்ப்பும் வரும். காரணம், அவ்வளவு துல்லியமாக அவர் வழக்குப் போடுவார். ஆனால் முதல் முறையாக அவருக்கு கடும் கண்டனம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.