மக்கள் அசவுகரியத்தை போக்க பணிக்குத் திரும்ப முடிவு... தொழிலாளர்கள் தரப்பு வக்கீல் பேட்டி!
மக்களின் அசவுகரியத்தை போக்கும் விதமாக நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை ஏற்று பணிக்குத் திரும்ப தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை : மக்களின் அசவுகரியத்தை போக்கும் விதமாக நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை ஏற்று பணிக்குத் திரும்ப தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு இறுதியாக ஊதிய உயர்வு விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி பத்மநாபன் அரசு, தொழிலாளர்கள் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக இருக்கும் 0.13 சதவீத ஊதிய வேறுபாடு குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிற்சங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாடி வந்த வழக்கறிஞர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும் போது: மத்தியஸ்தர் ஒருவரை நீதிமன்றம் ஊதிய உயர்வு குறித்து விசாரிக்க நியமித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் இது குறித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பு கூற வேண்டும்.

28 கோரிக்கைகளையும் அனுப்ப கோரிக்கை
ஊதிய உயர்வு தவிர மற்ற 28 கோரிக்கைகளையும் மத்தியஸ்தருக்கு அனுப்ப வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கேட்டோம். ஆனால் நீதிபதிகள் அனைத்து கோரிக்கைகளையும் அனுப்ப முடியாது சிலவற்றை தேர்வு செய்து அனுப்புவதாகக் கூறியுள்ளனர்.

உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்
நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கையால் தொழிலாளர்கள் திருப்தியடைந்துள்ளனர். எனவே இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவு வந்தவுடன் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள்.

சம்பளம் கிடைக்குமா?
வேலைநிறுத்த காலத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அரசு தெரிவித்தது, ஸ்டிரைக் காலத்திற்கான சம்பளம் வழங்கப்படுமா இல்லையா என்பதை மத்தியஸ்தர் முடிவு செய்யட்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்.

வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்
மக்கள் அசவுகரியப்படக் கூடாது என்பதே போக்குவரத்து தொழிலாளர்களின் விருப்பமும். எனவே அவர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பேருந்து ஓட்டுவார்கள் என்றும் வழக்கறிஞர் பிரசாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications