திருச்சி தோட்டா தொழிற்சாலை விபத்து- 5 பேர் கைது; ஆலை உரிமம் ரத்து
திருச்சி அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆலை உரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
திருச்சி : துறையூர் அருகே முருங்கப்பட்டியில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. இதில் நிலத்தடியில் இருந்த ஆலையின் 4-வது பிரிவில் வியாழக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.
ஆலையின் மற்ற பிரிவுகளில் பணியாற்றி 300 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் முருங்கப்பட் டியில் குவிந்தனர். பெண்கள், முதியவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற தங்கள் உறவினரின் நிலை குறித்து தகவல் தெரியாமல் கதறி அழுதனர்.
சிதைந்த உடல்கள்
மீட்புப் பணியில் 5 பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தோண்டத் தோண்ட சிதைந்த மற்றும் கருகிய நிலையிலான சிறு சிறு உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்தன. வெடி விபத்தில் உடல்கள் சிதறியிருக்கலாம் என்றும், இனி தோண்டுவது பயனளிக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு, மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.
5 பேர் கைது
நேற்று சிதைந்த உடல்பாகங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. தொழிற்சாலை வெடி விபத்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆலை விபத்து தொடர்பாக இயக்குநர் பிரகாசம், மேலாளர் ராஜகோபால் ஆலை உரிமையாளர்கள் கணேஷ் ராஜமணிகண்டன் வேங்கடபதி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலை உரிமம் ரத்து
தொழிற்சாலையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் விஷமாகியுள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். ஆலையை அரசு மூடாவிட்டால் நாங்களே மூடுவோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். ஆலை விரைவில் மூடப்படும் என்று தமிழக அமைச்சர் நடராஜன் மக்களிடம் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் தோட்டா தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அடையாளம் காண்பதில் சிக்கல்
தொழிற்சாலை விபத்தில் பலியான தொழிலாளர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதைந்து போனதால் அவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று தொழிற்சாலை பகுதிக்குள் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிதைந்த உடல்களைக் கண்டு கதறியது காண்பர்களின் கண்களை குளமாக்கியது.