குருமூர்த்தியை ஸ்டார் ஹோட்டலில் சந்தித்து பேசினேன்.. தினகரன் பரபரப்பு தகவல்
Recommended Video
சென்னை: குருமூர்த்தியை ரகசியமாக சந்தித்து, பாஜகவோடு இணக்கமாக போக பேச்சுவார்த்தைகள் நடத்தினீர்களாமே என்ற தொலைக்காட்சி சேனல் நேர்காணல் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார் டிடிவி தினகரன்.
தினகரன் கூறியதாவது: ஸ்டெர்லிங் சிவசங்கரன், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவை பார்க்க வந்தார்.
அப்போது, நானும் உடனிருந்தேன். அப்போது குருமூர்த்தி பற்றி பேச்சு வந்தது. தனது நண்பர்தான் துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்ற குருமூர்த்தி என சிவசங்கரன் எங்களிடம் தெரிவித்தார்.
ஆதங்கம்
என்ன காரணம் என்றே தெரியவில்லை, எங்கள் குடும்பத்தை தாக்கி எழுதிவருகிறாரே என்று எங்கள் ஆதங்கத்தை அவரிடம் கூறினேன். அப்போது, நீங்களே அவரிடம் கேளுங்கள். நான் லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில்தான் தங்கியுள்ளேன். அங்கு அவரை வரச் சொல்கிறேன். அவரிடமே நேரில் பேசுங்கள் என சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
ஸ்டார் ஹோட்டல்
எங்கள் இருவரது சந்திப்பும் லீலா பேலசில் 9வது ஃப்ளோரில், 2017 ஜனவரி 8ம் தேதி நடைபெற்றது. உங்கள் புத்தகத்தில் எங்களை தாக்கி எழுதுகிறீர்களே, சோ சார் இருந்தபோது, நடுநிலையோடு இருந்ததே என்றேன். ஆனால் அவரோ, உங்கள் குடும்பம், அது பண்ணுகிறது, இது பண்ணுகிறது என்றார். நான் ஆதாரங்கள் கொடுங்கள் என்றுதான் கேட்டேன்.
நேரில் சொன்னேன்
நாங்கள் எங்கள் கட்சியில் கருப்பு சட்டை போடவேண்டுமா, காலையில் இட்லி சாப்பிட வேண்டுமா என்பதையெல்லாம் நீங்க சொல்லாதீங்க என நேரில் கூறிவிட்டு வந்தேன். அப்போது அவர் கட்சியில் தலையிட்டாரா என தெரியாது.
இப்போதுதான் தெரிந்தது
எங்கள் குடும்பத்தைதான் அப்போது தாக்கி கொண்டிருந்தார். இப்போதுதான், தெரிந்தது, அவர் உள்நோக்கம் என்ன என்பது. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள், குருமூர்த்தியை அவ்வப்போது, சந்திக்கிறார்கள். அவர்தான் டெல்லியின் ஏஜென்டாக இருக்கிறார் என்பது எனக்கு பிறகுதான் தெரியவந்தது. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.