முதல்வர் கனவில் டிடிவி தினகரன்... திருவண்ணாமலை கோவிலில் யாகம்
ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் வெற்றி பெற்று முதல்வராக திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஆர்.கே. இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன், தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை அருகே உள்ள ஓரக்கண்டியம்மன் கோவிலில் யாகம் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவினால் துரோகி என்று விரட்டப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்குப் பிறகு போயஸ் தோட்டத்திற்குள் அடியெடுத்து வைத்தார். சசிகலாவை தூண்டிவிட்டு பொதுச்செயலாளராக்கினார். முதல்வர் ஆசையையும் தூண்டிவிட்டு சிறைக்கு அனுப்பி வைத்தார்.
அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக சசிகலாவின் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், கட்சியை தனது கண்ட்ரோலில் வைத்துள்ளார். ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இப்போது இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். வழக்குகள் உள்ள நிலையில் எந்த தைரியத்தில் இவர் போட்டியிடுகிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை.

யாகபூஜை
பங்குனி பிறக்கும் வரை பம்மிக்கொண்டிருந்த டிடிவி தினகரன், திருவண்ணாமலை அருகே உள்ள ஓரக்கண்டியம்மன் கோவிலுக்கு போய் பூஜை செய்து யாகம் நடத்தினாராம். இந்த ஏற்பாட்டினை செய்தது முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியாம்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
ஓரக்கண்டியம்மன் கோவில் சக்தி வாய்ந்த கோவிலாம். அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து விடுபட இங்கு செய்த தொடர் பூஜைதான் காரணமாம். வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிக்கி பதவியிழந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து விடுபட்டது இங்கு நடத்திய பூஜைகளினால்தானாம்.

டிடிவி தினகரன் பூஜை
இந்த கோவிலின் மகிமையைப் பற்றி டிடிவி தினகரனுக்கு எடுத்துக்கூறிதான் யாகத்திற்கு ஏற்பாடு செய்தாரம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து வழிபட்டால் வழக்கில் இருந்து விடுபடலாம் என்று கூறியிருக்கிறாராம். இதனையடுத்தே இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு வந்தாராம். வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் டிடிவி தினகரன்.

மனதில் உள்ள ஆசை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது பேசிய டிடிவி தினகரன், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பார் என்றும் தான் முதல்வராக ஆசைப்பட மாட்டேன் என்றும் கூறினார். ஆனாலும் அவரது அடிமனதில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது என்கின்றனர் அவருடன் இருப்பவர்கள்

என்னவாகும் அதிமுக
சசிகலாவிற்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட்டதால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணி பிரிந்துள்ளது. இப்போது முதல்வர் ஆசையில் காய் நகர்த்தி வருகிறார் டிடிவி தினகரன். தொடர்ச்சியாக பூஜைகள், யாகங்கள் நடத்தச் சொல்லியிருக்கிறாராம். இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இப்போதே மீட்டிங் போட ஆரம்பித்து விட்டார்களாம். நடப்பதைப் பார்த்தால் அதிமுகவில் அடுத்த பிளவுக்கு டிடிவி தினகரனே அச்சாரம் போட்டு விடுவார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications