ஆதரவு வாபஸ் பெற்றது ஏன்? சட்டசபை செயலாளரை சந்தித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விளக்கம்
முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சட்டசபை செயலாளரை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.
சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக சட்டசபை செயலாளர் பூபதியை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோது, சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று எடப்பாடி அணியினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் , ஆளுநரை சந்தித்து முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
இந்நிலையில் அதிமுக கொறடாவின் கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த 19 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து, முதல்வருக்கான ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து விளக்க கடிதத்தை அளித்தனர்.