எடப்பாடியின் அதிரடி.. மிரண்டு போன தினகரன்! பின்னணியில் இருப்பது யார்?
சென்னை: குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த நடவடிக்கையால் டிடிவி தினகரன் நடுங்கிப்போயுள்ளார். அதன் பின்னணி யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா சிறையில் இருந்தாலும், அதிமுகவின் பொது செயலாளர் அவர்தான். பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் தற்காலிக பொ.செ.எனினும் அவர் தான் அதிகாரம் படைத்தவர்.
பொ.செ.பதவியை எதிர்த்து தேர்தல் ஆனையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் முடிவு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சசியின் அதிகாரம் கட்சி ரீதியாக செல்லுபடியாகும் என்றே அதிமுக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், கட்சியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், கொள்கை சார்ந்த விசயங்களில் கட்சியின் நிலைப்பாடு குறித்த முடிவுகள் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் சசிக்கு உண்டு. அதேபோல, அவர் செயல்படாத சூழலில் துணை பொதுச்செயலாளருக்கு உண்டு. பொ.செ.சின்.அனுமதியோடு து.பொ.செ.செயல்பட முடியும்.
எடப்பாடி அறிவிப்பு
அந்த வகையில், குடியரசு தேர்தலில் அதிமுகவின் நிலை குறித்து சசி அல்லது தினகரன் தான் அறிவிக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க.வை அதிமுக ஆதரிக்கிறது என எடப்பாடி அறிவித்தார். சசியின் உத்தரவு படி அறிவிக்கப்பட்டது என எடப்பாடி தரப்பில் சிலர் சொன்னாலும் அதில் உண்மையில்லை. தன்னிச்சையாகத்தான் அறிவித்தார் எடப்பாடி.
மோடியின் ஊக்குவிப்பு?
மோடி கொடுத்த தைரியம் தான் அவரை அறிவிக்க வைத்தது என்கிறார்கள் அவரது அமைச்சரவை சகாக்கள். எடப்பாடியை தொடர்புகொண்டு அதிமுக ஆதரவைக் கேட்ட மோடியிடம், சசிகலாவிடம் கேட்டுவிட்டு அறிவிக்கலாமா? என கேட்டிருக்கிறார் எடப்பாடி. அதற்கு, அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கட்சிக்கும் ஆட்சிக்கும் இப்போது நீங்கள் தான். ஸோ...நீங்களே அறிவித்துவிடுங்கள் என அட்வைஸ் பண்ணியுள்ளார் . அதனைத்தொடர்ந்துதான் துணிச்சல் பெற்றவராக அதிரடியாக அறிவித்தார்.
மிரண்ட தினகரன்
எடப்பாடியின் அறிவிப்புக்கு பின்னால் மோடி கொடுத்த துணிச்சல் தான் இருக்கிறது என்கின்றனர் அதிமுகவினர். ஆதரவை கேட்ட மோடி, டெல்லிக்கு வர வேண்டும் எனவும் கட்டளையிட்டார் என்கிறார்கள். எடப்பாடியின் இந்த அதிரடி கண்டு தினகரன் மிரண்டு போனார்.
வெற்றிவேல் பதிலடி
இதையடுத்துதான் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை சீன் போட்டதுடன், வெற்றிவேலை விட்டு, எடப்பாடிக்கு அதிகாரமில்லை என சொல்லவைத்தார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.