அமைச்சர்கள் கூறியிருந்தால் நானே ஒதுங்கியிருப்பேன்... டிடிவி.தினகரன் உருக்கம்
அமைச்சர்கள் என்னை கட்சியிலிருந்து ஒதுங்குமாறு கூறியிருந்தால் நானே கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர்கள் தன்னை கட்சிலிருந்து ஒதுங்குமாறு கூறியிருந்தால் நானே கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார்.
கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அறிவித்தனர். சசிகலா குடும்பத்தினரால் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஆபத்து என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்றே ஒதுங்கிவிட்டேன்
இதனால் தமிழக அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இந்த அதிரடி திருப்பங்களுக்கு இடையே டிடிவி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கட்சியில் இருந்து நேற்றே தான் ஒதுங்கி விட்டதாக அவர் கூறினார்.
விரோதமாக நடக்க மாட்டேன்
தொண்டர்களுக்கு விரோதமாக நான் நடக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார். மேலம் தனக்கு என தனியாக ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
நானே ஒதுங்கிருப்பேன்
அமைச்சர்கள் கூறியிருந்தால் நானே கட்சியில் இருந்து ஒதுங்கியிருப்பேன் என்றும் டிடிவி தினகரன் கூறினார். மேலும் இதுதொடர்பான கூட்டத்திற்கு தன்னை அழைத்திருந்தால் தானும் சென்றிருப்பேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.
என்னிடம் யாரும் பேசவில்லை
அமைச்சர்கள் ஆலோசனைக்கு பிறகு என்னை சந்தித்து பேசுவதாக கூறினார்கள் ஆனால் தன்னிடம் யாரும் இதுவரை விரிவாக பேசவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
ஆர்கேநகர் தேர்தலில் போட்டியில்லை
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் கட்சியிலேயே நான் இல்லை. எப்படி தேர்தலில் மட்டும் போட்டியிட முடியும் என்றும் கூறினார்.