எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு எதுக்கு தராங்கணு நினைக்கிறீங்க?... டிடிவி தினகரனின் அசத்தல் விளக்கம்
எம்எல்ஏக்களை தக்க வைக்கவே ஊதிய உயர்வு என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: எம்எல்ஏக்களை தக்க வைக்கவே ஊதிய உயர்வு என்று டிடிவி தினகரன் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தற்போது தினகரன் வேறு சட்டசபையில் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை நடந்தது. அதன்பின் சட்டசபை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தினகரன் வெளிநடப்பு
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த மசோதாவின் மூலம் எம்.எல்.ஏக்கள் ஊதியம் 55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயரும். இந்நிலையில் நேற்றை போல் இன்றும் டிடிவி தினகரனுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
அனுமதி இல்லை
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சட்டசபையில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்தும் அதற்கு அனுமதி வழங்க சபாநாயகர் மறுத்து வருகிறார்.
எடப்பாடி அரசு மறைக்கிறது
தமிழக அரசு கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்து துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் நிதி பற்றாக்குறையில் சின்னாபின்னமாகியுள்ளது. ஆனால் இதையெல்லாம் இந்த எடப்பாடி அரசு மறைத்து நாடகமாடி வருகிறது.
அதிமுகவில் பங்காளி சண்டை
என்னை துணை பொதுச் செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணிதான். ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு ஜெயக்குமார் தான் முக்கிய காரணம். அதிமுகவில் பங்காளி சண்டை முற்றுகிறது.
ஓபிஎஸ் யாருக்கோ விசுவாசம்
எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்ளவே ஊதிய உயர்வை அளிக்கும் மசோதாவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஓ.பி.எஸ். செய்வதற்கு பெயர்தான் குடும்ப ஆட்சி. அவரது சம்பந்திதான் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர். ஓபிஎஸ் யாருக்கோ விசுவாசமாக இருக்க முயல்கிறார் என்றார் தினகரன்.