கட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியைத் துறக்க வேண்டும்.. அழுத்தம் கொடுக்கும் தம்பிதுரை!
கட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியை துறக்கவேண்டும் என தம்பிதுரை வலியுறுத்ததியுள்ளார்.
சென்னை: கட்சியின் ஒற்றுமைக்காக தினகரன் தனது பதவியை துறக்க வேண்டும் என எம்பி தம்பித்துரை வலியுறுத்தியுள்ளார். கட்சி மற்றும் ஆட்சியில் தினகரன் குடும்பத்தின் தலையீடு தேவையில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார்.
லோக்சபா துணை சபாநாயகரும் எம்பியுமான தம்பிதுரை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரனும், அவரது குடும்பத்தினரும் கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகளில் தலையிடுவதாக கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் எண்ணுவதாக தெரிவித்தார்.
அரசு நீடிக்க வேண்டும் என்று தினகரன் குடும்பத்தினர் விரும்பினால் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தம்பிதுரை கூறினார். மேலும் கட்சியிலோ, ஆட்சியிலோ தான் தலையிட மாட்டேன் என்றும், கட்சிப் பதவி அல்லது ஆட்சி அதிகாரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று முன்னரே தினகரன் கூறியிருந்தார்.

சசி குடும்பம் தலையிடக்கூடாது
அதனை நிறைவேற்றி அவர் ஆட்சி மற்றும் கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் தம்பிதுரை கூறினார். மேலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் தம்பிதுரை கூறினார்.

சசி குடும்பம் உணரவேண்டும்
இதனால் கட்சி மற்றும் ஆட்சியில் தங்கள் தலையீடு அவசியம் இல்லை என்பதை தினகரன் குடும்பத்தினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தம்பிதுரை வலியுறுத்தினார். ஏற்கனவே உறுதியளித்தப்படி கட்சியின் ஒற்றுமைக்காக அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நம்புகிறேன் என்றும் தம்பிதுரை கூறினார்.

கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே..
ஜெயலலிதா மறைந்தப்பிறகு சசிகலாதான் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என அதிகம் அழுத்தம் கொடுத்தவர் தம்பிதுரை. ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்தபோதே அவரது பதவிக்கு வேட்டு வைத்து கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என வலியுறுத்தியவர் தான் இந்த தம்பிதுரை.

சசியால்தான் கட்சியை காப்பாற்ற முடியும்
தற்போது கட்சியும் சின்னமும் சசிகலா தரப்புக்கு கிடைக்காது என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் ஒட்டுமொத்த சசிகலா ஆதரவு கோஷ்டியும் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சசிகலாவால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்று கூறிய வாய்கள் எல்லாம் அவரது குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications