காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டசபையில் தீர்மானம்... சபாநாயகருக்கு தினகரன் கடிதம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி. தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில் தமிழகத்திற்கு இதுவரை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நீரின் அளவு 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு இது பாதகமாக இருந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாதத்தில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது ஏற்கனவே உள்ள காவிரி கண்காணிப்பு குழுவே போதுமானது என்று கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பிப். 22ல் அனைத்துக்கட்சி கூட்டம்
இந்நிலையில் பிப்ரவரி 22ம் தேதி காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் கடிதம்
இதனிடையே சட்டசபை சபாநாயர் தனபாலுக்கு ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி. தினகரன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 177.25 டிஎம்சி என்ற அளவிற்கு நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

முக்கியமான தருணம்
இது அனைவருக்குமே வேதனை தரக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. தமிழக விவசாயிகள் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நீரின் அளவானது உடனடியாக வழங்கிட ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

மத்திய அரசை வலியுறுத்துங்கள்
காவிரி நதி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி 6 மாத காலத்தில் மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்று குழுவையும் அமைக்க மத்திய அரசு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். டெல்டா பகுதிகளில் காய்ந்து கருகிக் கொண்டிருக்கும் பயிர்களுக்கு உயிர் தண்ணீர் கிடைக்க ஏதுவாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்.

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டமன்றத்தை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பான 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டும்.

பிரதமருக்கு அழுத்தம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மேலாண்மை வாரியம் அமையப்பெற்றால் மட்டுமே உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். சட்டசபையில் நிறைவேற்றும் தீர்மானத்தை தமிழகத்திற்கு வர உத்தேசித்துள்ள 24ம் தேதி வழங்கி தமிழகத்தின் உணர்வை பிரதிபலித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த உரிய அழுத்தத்தையும் பிரதமரிடம் வலியுறுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications