அ.தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் அணியும் விரைவில் இணையும்- அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்
அ.இ.அ.தி.மு.கவோடு விரைவில், டிடிவி தினகரன் அணி இணையும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல், டி.டி.வி. தினகரன் அணியும் விரைவில் அஇஅதிமுகவில் இணையும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி மாவட்டம் முழுக்க பல்வேறு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களை மாவட்டம் முழுவதும் ஒளிப்பரப்புவதற்கான வாகனத்தை அமைச்சர் கே.சி.கருப்பணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கே.சி.கருப்பணன், கொங்கு மண்டலத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் யாரும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல், டி.டி.வி. தினகரன் அணியும் விரைவில் அஇஅதிமுகவில் இணையும் என்றார். இது மீண்டும் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஈரோட்டில் பேட்டியளித்த திவாகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கலைப்புக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. ஓபிஎஸ் ஈபிஎஸ் மற்றும் 5 மூத்த அமைச்சர்கள் பதவி நீக்கப்பட வேண்டும். எம்எல்ஏக்கள் இங்கும் அங்கும் செல்லாமல் தடுக்க ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மீண்டும் அணி இணைய வாய்ப்பில்லை என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.