காரில் டிரைவர் சீட் அருகே டிவி வைப்பதற்கு எதிராக புகார்: தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: கார்களில் டிரைவர் இருக்கை அருகே தொலைக்காட்சி பெட்டி வைப்பதற்கு எதிரான புகார் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வரும் பிப்ரவரி 20ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
தனியார் கார்கள், வாடகை கார்கள் தயாரிக்கப்படும் போது டிரைவர் இருக்கை அருகே தொலைக்காட்சி பெட்டி, டி.வி.டி. பிளேயர் வைக்கப்படுகின்றன. இதனால், காரை ஓட்டுபவரின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. டிரைவர் இருக்கை அருகே தொலைக்காட்சி பெட்டி அமைக்கப்படுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். எனவே, கார் டிரைவர் இருக்கை அருகே தொலைக்காட்சி பெட்டி மற்றும் டி.வி.டி. பிளேயர் வைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது,
மனுதாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் கூறுகிறார். அதே நேரம், நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரம் அவரிடம் எதுவும் இல்லை. யூகத்தின் அடிப்படையில் மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதே நேரம், மனுதாரரின் புகார் மீது சட்ட விதிகளுக்குட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை வருகிற பிப்ரவரி 20-ம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.