நாகர்கோவில்: 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி மிரட்டல் – பி.எஸ்.என்.எல் ஊழியர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவில் தேவசகாயம் தெருவைச் சேர்ந்தவர் ஜெரோம் ஜெயசீலன், (வயது 45). இவர் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் மெக்கானிக் பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நிர்வாக ரீதியிலான பிரச்சினையில் ஜெரோம் ஜெயசீலன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் இவருக்கு பணி வழங்கப்படவில்லை. தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜெரோம் ஜெயசீலன் கோரிக்கைகளை வைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9.45 மணி அளவில் தனது குடியிருப்பு வளாகத்தில் உள்ள சுமார் 120 அடி உயரமுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு சென்றார். அங்கிருந்தபடி தனக்கு மீண்டும் வேலை வழங்காவிட்டால் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டினார்.
இதுபற்றி அறிந்த டி.எஸ்.பி. பேச்சிமுத்து பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, சுந்தர்சிங் மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். ஜெரோம் ஜெயசீலனை கீழே இறங்கி வருமாறு கூறி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்து விட்டார்.
மதியம் குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சகாயம் செல்போன் டவரின் உச்சிக்கு சென்று ஜெரோம் ஜெயசீலனிடம் பேசினார். அவரது பேச்சையும் ஜெரோம் ஜெயசீலன் கேட்க மறுத்து விட்டார்.
இரவு வெகுநேரமாகியும் அவர் டவரில் இருந்து கீழே இறங்காததால் அங்கு பரபரப்பு அதிகரித்து கொண்டே சென்றது. பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்து கொண்டு நின்றனர்.
நள்ளிரவு 11 மணியளவில் அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் காரவிளை செல்வன் அங்கு வந்து ஜெரோம் ஜெயசீலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காரவிளை செல்வன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
13 மணி நேர போராட்டத்துக்கு பின் ஜெரோம் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கினார். போலீசார் கீழே இறங்கிய அவரை விசாரணைக்காக வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மீது தற்கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.