மழை வெள்ளத்தால் வீட்டிற்கு வரும் ”உஸ்.. உஸ்.. உஸ்”... பீதியில் சென்னை மக்கள்
சென்னை: தமிழகத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் அழையா விருந்தாளிகளாக வலம் வருகின்ற பாம்பு, பூரான், தேள் போன்றவற்றால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வரதராஜபுரம், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியில் உள்ள பெரும்பாக்கம் உள்ளிட்ட பல நகர்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வீடுகளுக்குப் படையெடுக்கும் பாம்புகள்:
சென்னை வேளச்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், புழல் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. இதன் காரணமாக எங்கும் வெள்ளக்காடாக கிடப்பதால் காடுகளில் பொந்துகளில் வசிக்கும் பாம்புகள் வீடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றன.

வனத்துறைக்கு தகவல்:
இதன் காரணமாக வீடுகளுக்குள் பாம்பை பார்த்தவர்கள் வனத்துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கிறார்கள். அவர்கள் வந்து பாம்பை பிடித்து செல்கிறார்கள்.

200க்கும் மேற்பட்ட அழைப்புகள்:
பாம்புகளை மீட்கும் தன்னார்வலர் தினேஷ் கூறுகையில், "வழக்கமாக சென்னையில் வாரத்திற்கு பாம்பு பிடிக்க 25 அழைப்புகள் வரும். ஆனால் மழை வெள்ளம் காரணமாக கடந்த வாரம் 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன" என்றார்.

மழை வடியும்வரை இதுதான் நிலை:
மழை வெள்ள நீரில் நடந்து செல்பவர்கள் தண்ணீரில் ஏராளமான பாம்புகளை பார்த்துச் செல்கிறார்கள். மழை நீர் வற்றி பழைய நிலை திரும்பும் வரை பாம்பு வீடுகளுக்குள்தான் புகலிடம் தேடும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது என்ன செய்யும் பாவம்
பாவம் பாம்புகள் என்ன செய்யும். அவை வசிக்கும் இடமெல்லாம் நாம் வீடு கட்டிக் குடியேறி விட்டோம். பிறகு அவை எங்கு போகும்.












Click it and Unblock the Notifications