ஜல்லிக்கட்டு போராட்டங்களால் அச்சம்.. சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் போலீஸ் குவிப்பு!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெடித்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் பாதுப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் நடைபெற்று வந்த போராட்டங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் இளம்பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டா அமைப்பைக் கண்டித்தும், அதற்கு தடைவிதிக்கக்கோரியும் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை சிலர் முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அமெரிக்க துணை தூதரகத்தில் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
ஆனால் இந்த போராட்டம் காரணமாக அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பேரிகார்டு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications