செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய மதிமுக நிர்வாகிகள்... மன்னிப்பு கேட்ட வைகோ
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய மதிமுக நிர்வாகிகளை கண்டித்த வைகோ, நடந்த சம்பவத்திற்கு செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்த தோடு மன்னிப்பும் கோரினார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார். வைகோவை வரவேற்று ப்ளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனையறிந்த பத்திரிகையாளர்கள் அங்கு வந்தனர்.
அப்போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மதிமுக நிர்வாகி, பத்திரிகையாளர்களை அவதூறாக பேசி வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
வைகோவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்த போது கட்சி நிர்வாகி ஒருவர், தேர்தலில் குழப்பத்திற்கு காரணம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியினர்தான் என்று கூறியதோடு தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.
திருமண வீட்டில் வைகோவிடம் பேட்டொயெடுக்க வந்த செய்தியாளர்கள் பிளக்ஸ் போர்டுகளை வீடியோ எடுத்துள்ளனர். அப்போதும் கட்சி பிரமுகர்கள் இருவர் மீடியாவினரை அச்சில் ஏற்றமுடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் மறியலில் இறங்கினர். இதனையடுத்து மதிமுக நிர்வாகிகள் அழைத்து மன்னிப்பு கேட்கவைத்த வைகோ, அவரும் மன்னிப்பு கேட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.