என்னைப் பற்றிய மீம்ஸால் வருத்தத்தில் குடும்பத்தினர்... இனியாவது யோசித்து போடுங்கள்... வைகோ உருக்கம்!
என்னைப் பற்றிய மீம்ஸை பார்த்து மனஉளைச்சலிலேயே மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை : என்னைப் பற்றிய மீம்ஸை பார்த்து மனஉளைச்சலிலேயே மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இனியாவது மீம்ஸ் போடுபவர்கள் யோசித்து போட வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்டெர்லைட்டு நிர்வாகத்தில் பங்கு வாங்கிவிட்டதாக போடப்பட்டுள்ள மீம்ஸால் குடும்பத்தினர் உளக்கொதிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னுடைய மனைவி ரேணுகாதேவியின் அண்ணன் ராமானுஜத்தின் மூத்த மகன் இப்போது தீக்குளித்து உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறார். சரவணன் சுரேஷ் ஒரு பட்டதாரி அவர் மனைவி அமுதா அருமையான வாழ்க்கைத் துணை, அழகான குடும்பம். எங்களின் குடும்பத்திலேயே என்னுடன் கட்சிப்பணிகள் அனைத்திலும் இருப்பவர் சரவணன் சுரேஷ் மட்டுமே. என்னுடைய மைத்துனருக்கு 5 மகன்கள், அரசியல் ரீதியாக என்னுடனே இருப்பவர் சரவணன் சுரேஷ் தான்.
மிகவும் பக்குவப்பட்டவர், என்னுடன் எல்லா அரசியல் கூட்டங்களுக்கும் வருவார் ஆனால் ஒரு புகைப்படம் கூட எடுத்தது கிடையாது. எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது, அவருடைய திருமணத்தை நான் தான் நடத்தி வைத்தேன். சரவணன் சுரேஷின் மகன் பொறியியல் படித்து வருகிறார், மகள் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
கேலி செய்து முகநூல் பதிவு
மார்ச் 30ம் தேதி மாலையில் வீட்டிற்கு வந்த போது வழக்கமாக இல்லாமல் வருத்தப்பட்டு அழுதார். முகநூலில் போடப்பட்டிருந்த ஒரு கருத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் என் மகன் வையாபுரிக்கு 3 சதவீத பங்கு வாங்கி இருப்பதாக போட்டிருந்தார்கள். ஸ்டெர்லைட் டீல் முடித்து இன்று நியூட்ரினோவிற்கான டீல் பேச புறப்பட்டு விட்டேன் என்று பதிவிட்டிருந்தார்கள்.
ஜாதியை குறிப்பிட்டு வசைபாடல்
இந்த பதிவை சுட்டிக்காட்டிய சுரேஷ் ஸ்டெர்லைட்டுக்காக நீங்கள் 32 ஆண்டுகளாக போராடுகிறீர்கள், இப்போது போராட்ட களத்திற்கு வந்தவர்கள் ஏன் உங்களைப் பற்றி இப்படி போடுகிறார்கள். ஜாதியை குறிப்பிட்டும் கருத்து போடுகிறார்களே என்று அவர் என்னிடம் கூறி வருத்தப்பட்டார்.
தீக்குளிப்புக்கான காரணம்
நான் அவரை சமாதானப்படுத்தி விட்டு என்னுடைய நடைபயணத்திற்காக சென்றுவிட்டேன். சோர்வாக இருந்த சுரேஷ் இன்று காலையில் வாக்கிங் செல்வதாக சென்று விருதுநகர் விளையாட்டு மைதானத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார் இதில் 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
மீம்ஸால் கவலையில் குடும்பத்தினர்
மீம்ஸ் போடுபவர்கள் இனியாவது யோசித்து மீம்ஸ் போடுங்கள், என்னைப் பற்றிய மீம்ஸ்களால் எனது குடும்பத்தினர் நொறுங்கிப் போயுள்ளனர். தொண்டர்கள் மட்டுமே தீக்குளிப்பதாக குற்றம் சொல்பவர்களுக்கு என்னுடைய குடும்பத்தில் இருந்தும் ஒருவர் தீக்குளித்துவிட்டார் என்பதைத் தான் சொல்கிறேன்.
குடும்பத்தினர் கொதிப்பில்
அரசியலில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துவிட்டேன். ஆனால் ஸ்டெர்லைட்டில் பங்கு வாங்கிவிட்டதாக போட்ட மீம்ஸ்களை பார்த்து என்னுடைய குடும்பத்தார் உளக்கொதிப்பில் உள்ளனர். கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் யாரும் தீக்குளிக்க வேண்டாம், வாழ்ந்து போராடுவோம் என்று வைகோ கூறியுள்ளார்.