7 பேர் விடுதலை: ராகுலுக்கு என்ன பேசுகிறோம் என்றே தெரியாது - வைகோ
மதுரை: ஏழு தமிழர்களை விடுதலை செய்வது பற்றிய தமிழ அரசின் முடிவுக்கு என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே ராகுல் காந்தி உள்ளார்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் ஜெயலலிதா புதன்கிழமையன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ''நாம் நாட்டின் பிரதமரை கொன்றவர்களையே தண்டிக்காமல் விடுவிப்பது எப்படி சரியாகும்? பிரதமரை கொன்றவர்களையே விடுவிக்கும்போது, சாதாரண மனிதர்கள் பாதிக்கப்படும்போது எப்படி நீதி கிடைக்கும்?'' என அவர் கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ''எப்போதும் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே ராகுல் காந்தி உள்ளார். அவர் கண்டனம் தெரிவித்ததற்கான காரணம் அனைவரும் அறிந்ததே'' என்று கூறியுள்ளார்.